Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

வணக்கம்,

குவைத்தில் இயங்கிவரும் இலக்கிய அமைப்பான “பாலைக்குயில்கள்” சார்பாக வெளிவரும் இலக்கிய இதழான “வலம்புரி” யின் இரண்டாவது இதழை இம்மடலுடன் இணைத்துள்ளேன்.

தங்கள் மேலான கருத்துக்களை கூறவும்.

வலம்புரி பங்குனி மாத இதழின் மின்கோப்பு

தருமு அரூப் சிவராம் எனும் பிரமிள் (1939 – 1997)

pramil_color.jpg

பாரதி, ந.பிச்சமூர்த்தி ஆகியோரை தொடர்ந்து தமிழின் நவீன கவிதை கோபுரத்தை தனக்கேயான கவிமொழியின் சிற்பங்களால் செதுக்கியவர். இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். 1975 -லிருந்து தமிழகத்தில் வசித்தார். கவிதை, ஓவியம், சிறபம், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், விமரிசனம், தத்துவம், மெய்தேடல் ஆகியவற்றில் தேர்ந்த அவரது அறிவும் செயல்பாடும் வியப்பானது. மிகக் கூர்மையான விமர்சகர். தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் கவிதைகளாஇ எழுதியுள்ளார். தண்டுவட ப்ற்று நோயால் அவதியுற்று கவனிப்பாரின்றி இறந்தார். வேலூரை அடுத்த கரடிக்குடி எனும் கிராமத்தில் இருக்கிறது அவரது புதைமேடு.

– பாம்பாட்டிச் சித்தன்

பிரமிள் கவிதைகள்

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது.

குமிழிகள்

இன்னும்
உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.

கைப்பிடியளது
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர்மொக்கு.

வண்ணத்துப்பூச்சியும் கடலும்

சமுத்திரக் கூரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளைசரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

பொருளடக்கம் செல்ல…

“கசார்களின் அகராதி” (The Dictionary of Khazars) செர்பிய நாவலாசிரியரான மிலோராட் பாவிச் 1984ல் எழுதிய நாவலாகும்.நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என பன்முக ஆளுமைக்கொண்ட பாவிச்சின் முதல் நாவல் இது. நாவலின் வேறுபட்ட வசிப்பிற்கு இடம் தராது ஒரே திசையில் பயணிக்கும் வடிவம் குறித்த விமர்சனங்கள் பாவிச்சுக்கு இருந்தது. நாவல் வாசகனுக்கு ஒரே ஒரு முன் வாசலையும் ஒரு பின்வாசலையும் வைத்திருப்பது புழுக்கத்தை தருவதாய் உணர்ந்த இவர், அதை போக்க பல யுத்திகளை தனது நாவல்களில் கையாண்டார். அம்முயற்சிகளின் தொடக்கமாக, அகராதி வடிவில் அவர் எழுதிய நாவலே “கசார்களின் அகராதி”.

கசார்கள் 7ஆம் நூற்றாண்டில் இருந்து 10ஆம் நூற்றாண்டு வரை கருங்கடலுக்கு அருகில் ஆட்சிபுரிந்து வந்த ஓர் இனக்குழு. 9ஆம் நூற்றாண்டின் குறிப்பிடப் படாத ஏதோ ஒரு வருடத்தில், கசார் மன்னர்க் குடும்பங்களும், மக்களில் பெரும்பாலானவர்களும் யூத மதத்தை தழுவினார்கள். இதன் பின் இவ்வினம் தனது தனித்துவத்தை இழந்து, வரலாற்றின் ஏடுகளில் இருந்து மறைந்துவிட்டது. இவை தான் கசார்களை பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்று தகவல்கள்.இதில் கூட்டாய் மதம் மாறிய அந்நிகழ்வை மையமாய் வைத்தே பாவிச் இந்நாவலை உருவாக்கியுள்ளார். இந்நாவலின் படி கசார் மன்னனுக்கு ஓர் கனவு வருகிறது. அதில் ஓர் தேவதை தோன்றி, “மன்னனே, உனது நோக்கம் ஆண்டவனுக்கு பிடித்திருக்கிறது. ஆனால் உனது செயல்களில் அவருக்கு திருப்தியில்லை.” என்கிறாள். உடன் கசார் மன்னன் யூத, கிருத்துவ, இஸ்லாமிய அறிஞர்களை அழைத்து, யார் தனது கனவிற்கான சரியான விளக்கத்தை தருகிறார்களோ, அவர்களுடைய மதத்தை தானும் தனது நாடும் தழுவுவதாக கூற விவாதம் தொடங்குகிறது. இந்நிகழ்வினையும் இந்நிகழ்வில் பங்குகொண்டவர்களையும் குறித்த அகராதி ஒன்று 1691ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டு, மறு ஆண்டே அழிக்கப்படுகிறது. அதன் மறுபதிப்பே இந்நாவல். எது புனைவு, எது நிஜம் என அறிய முடியாத ஓர் மாயவெளியிலேயே நாவல் நிகழ்கிறது.

இந்நாவல் உண்மையில் மூன்று அகராதிகளின் தொகுப்பு. “கசார் மத மாற்றத்தை” பற்றிய மூன்று அகராதிகள் உள்ளன. இதில் சம்மந்தப்பட்ட மூன்று மதங்களும், இந்நிகழ்விற்கு, தங்களுக்கு சாதகமான வகையில் அர்த்தம் தந்து, கசார்கள் தங்கள் மதத்திற்கே மாறினர் என நிறுவுகின்றன. கிருத்துவர்களின் அகராதியான சிகப்பு புத்தகம் (Red Book), இஸ்லாமியர்களின் அகராதியான பச்சை புத்தகம் (Green Book) மற்றும் யூதர்களின் அகராதியான மஞ்சள் புத்தகம் (Yellow Book), ஆகிய புத்தகங்களின் கூட்டு தான் இந்நாவல். ஒவ்வோர் அகராதியின் ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும் மொத்த கதையின் ஒரு பகுதி நமக்குள் அமர்கிறது. அகராதி வடிவில் இருப்பதினால், இதை எப்படி படிக்கவேண்டுமென நாம் தான் முடிவு செய்ய வேண்டும். “புத்தகத்தை கீழே போட்டு, அது எந்த பக்கத்தில் திறந்திருக்கிறதோ, அங்கிருந்து கூட நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம்” என்கிறார் பாவிச். இந்நூலின் மற்றுமொரு குறிப்பிடப்படவேண்டிய அம்சம், இது இரு பதிப்புகளாக வெளிவந்துள்ளது. ஆண் மற்றும் பெண் பதிப்புகள். இரண்டிற்கும் 17 வரிகளில் தான் வித்தியாசம். ஆனால் முழு கதையின் போக்கையே மாற்றக்கூடிய 17 வரிகள் என்கிறார் பாவிச்.

இதன் பிறகும் அவர் எழுதிய ஒவ்வோர் நாவலிலும் உள்ளடக்கத்தின் ஆழத்திற்கு இணையாக நாவலின் வடிவத்திலும் கவனம் செலுத்திவந்திருக்கிறார். இவரது நாவல்களின் பட்டியல் இது:

Dictionary of the Khazars – அகராதி வடிவிலான நாவல்.

Landscape painted with tea – குறுக்கெழுத்து போட்டி வடிவிலான நாவல்.

The Innerside of Wind – கிரேக்க புராண கதாப்பாத்திரங்களான †£ரோ மற்றும் லியாண்டரை பற்றிய நாவல். ஆரம்பம் முதல் கடைசி வரையோ அல்லது கடைசியிலிருந்து ஆரம்பம் வரையோ, எத்திசையிலும் படிக்கக்கூடிய நாவல்.

Last Love in Constantinople – எதிர்காலத்தை கணிக்கப் பயன்படும் டாரட் அட்டைகளின் (Tarot Cards) வடிவில் எழுதப்பட்ட நாவல்.

Unique Item – நூறு முடிவுகளை கொண்ட நாவல். எந்த முடிவை படிக்கவேண்டுமென வாசகன் முடிவு செய்துக்கொள்ளலாம்.

இதன் அடுத்தக்கட்டமாக இவர் இன்று அதிபுனைவு (Hyper Fiction) என்ற வடிவத்தை வைத்து சில பரிசோதனை முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறார். கணினியில் படிக்கக்கூடிய கதைகளில் பயன்படுத்தக்கூடிய வடிவம் இது. இணையத்தில் மிகப்பரவலாக பயன்படுத்தப்படும் விடயம் சுட்டிகள் (links). இதையே கதைகளிலும் பயன்படுத்தி, கதையின் போக்கை தீர்மானிக்கும் அதிகாரத்தை வாசகனுக்கே வழங்குவதே இந்நோக்கத்தின் சிறப்பு. கசார்களின் அகராதி நாவலின் கணினி வடிவம் இப்போது அதிபுனைவாக குறுந்தகடில் (CD) வெளிவந்துள்ளது.

– வெ. சித்தார்த்

பொருளடக்கம் செல்ல…

சமீப காலத்தில் வலைப்பதிவு அல்லது வலைப்பூ என பரவலாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இணைய உலகம் பற்றி உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. நமக்கு தேவையான எந்த தகவலையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளவும் மின்மடல்கள் அனுப்பவும், நாம் இணையத்தை பயன்படுத்தி வருகிறோம். தற்காலத்தில் இணையம் என்பது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்பது நிதர்சனம்.
இந்த பரந்த உலகத்தை இணையம் நமது கைப்பிடிக்குள் கொண்டுவந்து விட்டது என்று சொல்வது மிகையாகாது. இணையத்தில் நாம் நமக்கான ஒரு தனி தளம் உருவாக்க வேண்டுமெனில் முதலில் நம் இணையதளத்தை வடிவமைக்கவேண்டும். இணையதளம் வடிவமைக்க நமக்கு தெரியாமலிருந்தால் வேறு ஒரு நிறுவனத்தையோ அல்லது வடிவமைப்பாளர்களையோ அணுகவேண்டும். பிறகு இணையதளத்தை பதிவு செய்யவேண்டும். இதுமட்டுமல்லாது நம் தளத்தை தொடர்ந்து பராமரிக்கவேண்டும். அதற்காக இதுபோன்ற சேவைகளை செய்துவரும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளவேண்டும் அல்லது நாமே அனுபவமுள்ள ஒருவரை நியமிக்கவேண்டும். இவையெல்லாம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமான விசயம். மேலும் இவையனைத்தும் முக்கியமாக வணிக நோக்கத்தில் செய்யப்படுபவையே.

சிறிய அளவில் நமக்காக நம் எண்ணங்களையும், படைப்புகளையும் எப்படி இணையத்தில் எழுதுவது என்ற யோசனை பலருக்கும் இருக்கும். அதற்காக உருவாக்கப்பட்ட சேவைகள் தான் வலைப்பதிவுகள் அல்லது வலைப்பூக்கள். http://www.blogger.com, http://www.wordpress.com போன்ற பல இணையதளங்கள் இந்த சேவையை இலவசமாக அளிக்கின்றன. இந்த சேவையை பயன்படுத்தி நாம் நமக்கான சொந்த பதிவை உருவாக்கி அதன் மூலம் நமது எண்ணங்களையும், கருத்துக்களையும், படைப்புகளையும் வெளியிடலாம். வலைப்பதிவு உருவாக்குவதும் மிகவும் எளிது. அதற்கான எல்லா வழிமுறைகளையும் இந்த சேவையை வழங்கும் இணையதளங்கள் மிகவும் எளியமுறையில் சொல்லி தருகின்றன.

இணையத்தளங்களை போலவே வலைப்பதிவுகளும் தமிழில் ஏராளமாக உள்ளன. கடந்த காலத்தில் உங்களின் ஒரு படைப்பை பத்திரிகைக்கு அனுப்பினால் பொதுவாக அவை பிரசுரிக்கப்படாமல் திரும்பிவரும் அல்லது வராமலே கூட இருக்கும். அதனால் உங்களுக்கு உங்கள் படைப்பின் மீதுள்ள நம்பிக்கை போய்விடுகிறது. மேலும் எழுதுவதற்கான உற்சாகம் வடிந்துவிடுகிறது. ஆனால் வலைப்பதிவுகளில் அந்த பிரச்சினை இல்லை. உங்களுக்கு விருப்பமான எதையும் எழுதலாம், சுதந்திரமாக எழுதலாம். வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த பலர் தற்போது பிரபலமடைந்துள்ளனர். தற்போது ஊடகங்களில் எழுதும் பல முக்கியப் படைப்பாளிகளும் தங்களுக்கென வலைப்பதிவுகளை உருவாக்கிக்கொண்டு தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இதுமட்டுமல்லாது தமிழ் ஊடகங்களும் வலைப்பதிவுகளிலிருந்து பல செய்திகளை எடுத்து வெளியிடுகின்றன. அந்த அளவுக்கு வலைப்பதிவுகள் தற்போது முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உங்கள் படைப்புக்கான பின்னூட்டங்களையும் உங்கள் வலைப்பதிவிலேயே பார்க்கமுடியும். இதன்மூலம் உங்கள் எழுத்தின் தரத்தை நீங்கள் உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

மேலும் அனைத்து வலைப்பதிவுகளையும் சேகரித்து ஒரே தளத்தில் தரும் சேவையையும் சில தளங்கள் செய்து வருகின்றன. தமிழ்மணம் (www.thamizmanam.com), தேன்கூடு (www.thenkoodu.com) போன்ற தளங்கள் இவற்றில் முக்கியமானவை. இந்த தளங்களில் உங்கள் வலைப்பதிவு முகவரியை பதிவு செய்து விட்டால், ஒவ்வொரு முறையும் நீங்கள் புதியதாக எழுதும் படைப்புகளின் தலைப்புகள் இத்தளங்களின் முகப்பில் வெளியிடப்படும். இதன் மூலம் பலருக்கும் புதியதாக என்ன எழுதப்பட்டிருக்கிறது என தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. இணையத்தில் தேடவேண்டிய அவசியமும் சிரமமும் இல்லை. மேலும் உங்கள் பதிவுக்கான பின்னூட்டங்களின் எண்ணிக்கையையும் இத்தளங்களின் மூலம் பார்க்கலாம்.

மேலும் விவரங்கள் அறியவும் உங்களுக்கான புதிய வலைப்பதிவை உருவாக்கவும் மேலே குறிப்பிட்டத் தளங்களுக்குச் சென்று பாருங்கள்.

– மஞ்சூர் ராசா

பொருளடக்கம் செல்ல…

அற்றைத் திங்கள்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

பாடற்ப் பொருள் : பெறியோர் சிறியோர்

தினை : பொதுவியல்

துறை : பொருண் மொழிக் காஞ்சி

பாடியவர் : கணியன் பூங்குன்றன்

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய “புறநானூற்றில்” 192 -வது பாடலாக் தொகுக்கப் பட்டுள்ளது.

பாடல்:

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்தென்றும் இலமே,முனிவின்
இன்னாது என்றலும் இலமே,மின்னொடு
வானம் தண் துளி தலைஇ யானது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”

பொருள்:

உலகத்தின் அனைத்து ஊர்களூம் நமதே. உலக மக்கள் அனைவரும்
நமது உறவினர்களே.
நன்மையும் தீமையும் பிறரிடமிருந்து வருவதன இல்லை, நம்மிடமிருந்தே வருவன.
இறத்தல் என்பது புதிதல்ல அது நாம் பிறக்கும் போதே உருவானது.
வாழ்க்கையானது என்றும் இனிதானது அல்ல, துன்பத்தையும் உள்ளடங்கியதே.

மின்னலோடு கூடிய மழையைத் தொடர்ந்து சீறிப்பாயும் ஆற்றின் பாறைகளில் மோதி அலையும் படகைப் போன்றது நம் வாழ்க்கை, இருப்பினும் அதன் சொந்தப் பாதையில் செல்லக் கூடியது.

எனவே, வாழ்வில் உச்சத்திலுள்ளவர்களைக் கண்டு வியப்பதும், தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை கண்டு இகழ்தலும் கூடாது.

– தமிழ்நாடன்

பொருளடக்கம் செல்ல…

எண்ணிக்கையில் குறைவான வாசகர்கள், குறைவான முதலீடு, குறுகிய வாழ்வு ஆகிய தன்மைகளை கொண்டிருப்பதாலேயே “சிறுபத்திரிகை” எனும் பெயர் நிலைபெற்றுவிடவில்லை. தீவிர இலக்கியத்தின் மறுபெயர் சிறுபத்திரிகை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஐரோப்பா, அமெரிக்கா அகிய நாடுகளின் தீவிர இலக்கிய வரலாற்றுக்கும் பொருந்தும். இலக்கியத்தின் மதிப்பும் அதில் மக்களின் ஆர்வமும் பொதுவாகத் தாழும்போது இயல்பான நிகழ்வாகவும் துணிகரமான எழுச்சியுடனும் அதை எதிர்த்து வினையாற்றி வந்திருப்பவை “சிறுபத்திரிகைகள்” தாம். அவை ஒருவிதமான எதிர் நீரோட்டத்தை தமது இயக்கத்தில் வைத்துள்ளன.
அதன் இயக்கம் எப்போது நிற்கும் (பணமின்மை, தரமான படைப்புகள் இன்மை) என்ற அநிச்சய நிலையே அவற்றின் தரநிர்ணய அளவுகோல் எனச்சொல்லலாம்.

அவ்வாறான சிறுபத்திரிகை இயக்கத்தின் வழியில் “புது எழுத்து” இதழும் ஒன்று. கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியற்று வெளிவரும் இச்சிற்றிதழ் ஒவ்வொரு இதழிலும் இரண்டு புத்தகங்களை உள்ளடக்கியது. முதல் புத்தகத்தில் கடந்த மற்றும் சமகால இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகளும், இரண்டாவது புத்தகத்தில் மேற்கத்திய இலக்கிய அறிஞர்களை அறிமுகம் செய்யும் முயற்சியாக அவர்களின் இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகளும் இடம்பெறுகின்றன.

தவிர, தரமான இலக்கிய படைப்புகளை புது எழுத்து பதிப்பகம் நூல்வடிவில் வெளியிட்டும் வருகிறது.

புது எழுத்து வாசிக்க விரும்புவோர் பாலைக்குயில்கள் நூலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

புது எழுத்து குறித்த சந்தா மற்றும் இதர தொடர்புகளுக்கு,

மனோன்மணி,
39, ஜே.கே.சி. தெரு,
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தமிழ்நாடு-635113.
தொலைபேசி : 04343-252665,
மின்னஞ்சல் : puduezuthu@gmail.com

– பாம்பாட்டிச் சித்தன்

பொருளடக்கம் செல்ல…

fiveintheafternoon.jpg

உண்மையில், அடிப்படைவாதி என்பவன் அதீதமான நம்பிக்கையாளன். அவனது நம்பிக்கைகள் காலத்தில் பின் தங்கிவிட்டன என்ற செய்தி அவனை அடையாத வண்ணம் காதுகளை அடைத்துக்கொள்ளும் அளவிற்கு நம்பிக்கையாளன். ஆனால் காலத்திற்கு, காதுகளை மூடிக்கொண்டிருக்கும் அவனது விரல்களைப் பற்றிய அக்கறை இல்லை. மரணச்செய்தியை கொண்டுவருபவனது தயக்கம் அதனிடம் இல்லை. அவன் நிற்கும் நிலத்தை தகர்த்துவிட்டு முன்னகர்கிறது அது. தான் ஒரு காட்சிப்பொருள் ஆகிவிட்டதன் இழிநிலை அவனுக்கு புரிவதில்லை. நாடோடியாகி தேடிக்கொண்டிருக்கிறான், அவன் நம்பிக்கை மரத்திற்கான நிலத்தினை…

அடிப்படைவாதிகளுக்கு மத்தியில் சாதாரணன் வாழ்வது சுலபமல்ல. அவர்களிருவரும் பேசும் மொழி ஒன்றல்ல. ஒருவருக்கு வெறும் விலங்காக தோன்றும் குதிரை மற்றொருவருக்கு கடவுளின் வாகனமாக தோன்றுகிறது. அதனினும் கடினம் அவர்களின் ஆளுமைக்குக் கீழ் வாழ்வது. ஏனெனில் சாதாரணனும் குதிரையை கடவுளின் வாகனமாய் நம்ப வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறான். அவனது ஆசைகள் சமூக கட்டமைப்பு சக்கரத்தின் கீழ் நசுங்குகின்றன.

இவ்விருவருக்குமான உறவை, அதன் சிக்கல்களை தாலிபானின் வீழ்ச்சிக்கு பின்னான அப்கானிஸ்தானை மையமாய் வைத்து அலசுகிறது 24 வயதேயான இரானிய பெண் சமீரா மக்மல்பாஃப் இயக்கிய பாஷ்துன் மொழிப் படமான “மாலை ஐந்து மணிக்கு”.

நோஹ்ரா. தாலிபான் அரசின் பிடியில் சிறகுகள் ஒட்டப்பட்டிருந்த 20 வயது பெண். காபுல் வாசி. அவ்வரசின் வீழ்ச்சிக்கு பின் சிறகசைப்பின் சுகத்தை அனுபவிக்க எண்ணுகிறாள். ஆனால் அதுவும் கூட ரகசியமாகவே செய்யக்கிடைக்கிறது. காரணம் அவளது அடிப்படைவாதியான தந்தை. பள்ளிக்கு செல்லுதல், ஹீல்ஸ் வைத்த காலணிகளை அணிதல், நொண்டி விளையாடுதல் போன்ற சாதாரண விடயங்கள் கூட தடைசெய்யப்பட்டிருந்த – இன்று விழித்து, தனது தூக்கத்தின் போது உலகம் போய்விட்ட தூரத்தை மலைத்துப் பார்க்கும் – ஒரு பூமியில், நாட்டின் அதிபராக வேண்டும் என்ற கனவோடு வளம்வரும் பெண் நோஹ்ரா. குதிரை வண்டி ஓட்டும் தந்தையோ, முகத்தை மூடாத பெண்களை தனது வண்டியில் ஏற்றாத மதவாதி. நாடு அழிவின் பாதைக்கு சென்றுக்கொண்டிருக்கிறது எனவும், பெண்கள் முகம் தெரிய நடப்பதும் நாராசமான இசை காபுல் எங்கும் நிரம்புவதும் அதன் சாட்சிகள் என தீர்க்கமாக நம்புபவர்.

20 வருடங்களுக்கு முன்பிருந்த காபுலின் எலும்புக்கூடாய் நிற்கிறது இன்றைய காபுல்.அஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு சண்டை நகர, அங்கிருந்து காபுலுக்கு அகதிகள் வந்தவண்ணமுள்ளனர். அவர்களுடன் மேற்கத்திய இசையும், ஹிந்திப் பட சுவரொட்டிகளும். தனது கடவுளுக்கும் தனக்கும் இடையில் வந்துவிட்டவர்கள் இவர்கள் என கருதி, நோ‹ராவின் தந்தை தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறார். அவரது மூத்த மகன் பாகிஸ்தானில் வேலை செய்துகொண்டிருக்கிறான். மருமகளும் கைக்குழந்தையும் இங்கே இவருடன். மகனிடமிருந்து தகவலேதும் வராததால் வரும் அகதிகளிடம் விசாரித்த படி உள்ளனர். நோராவின் அரசியல் கனவு, மருமகளின் காத்திருப்பு, தந்தையின் அடிப்படைவாதம் ஆகிய மூன்று புள்ளிகளால் இடப்பட்ட கோலமென விரிகிறது திரைக்கதை. இதை போரின் பின்னணியில் கூறியிருப்பது களத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாய் உள்ளது.

மிக இயல்பான இயக்கம், மிகையற்ற நடிப்பு, போரின் மௌன சாட்சியாய் பின்னணியில் விரியும் காபுல், அகதிகளுக்கும் நகரவாசிகளுக்குமான மெல்லிய ஊடல், அந்த நடுங்கச்செய்யும் கடைசி காட்சி என எல்லாமும் சேர்ந்து இத்திரைப்படத்தை ஓர் மறக்கமுடியாத அனுபவமாக மாற்றுகின்றன.

படம் : பன்ஞ்-இ-அஸ்ர் (மாலை ஐந்து மணிக்கு)
மொழி : பாஷ்தூன்
இயக்கம் : சமீரா மக்மல்பாஃப்

– வெ. சித்தார்த்

பொருளடக்கம் செல்ல…

எழுத்தின் சிகரங்கள்:
எதார்த்தத்தின் ஊற்றுக்கண் – புதுமைப்பித்தன் (1906 – 1948)

pithan.JPG

சிறுகதை, கட்டுரை, கடித இலக்கியம், புதினம், மொழிபெயர்ப்பு, கவிதை, திரைப்படத்துறை (அவ்வையார், காமவல்லி மற்றும் ராஜபக்தி ஆகிய திரைபடங்கள்) என பன்முகப்பட்ட கலைஞனாகத் திகழ்ந்தவர். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். “மணிக்கொடி” சிற்றிதழில் தொடர்ந்து எழுதியவர். தன்காலத்து சமூக அவலங்களை உள்ளார்ந்த நகைச்சுவை உணர்வுடன் எழுதிய கலைஞன். தான் அடைய வேண்டிய எழுத்தின் சிகரங்களை அடைந்த அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை சமூகம் மிகத்தாமதமாகவே வழங்கியிருக்கிறது. “விதி என்னை குப்புறத்தள்ளிவிட்டு, ஜெயித்துவிட்டதாக குதூகலம் கொள்கிறது. நிஜத்தில் ஜெயித்துவிட்டதா என்று போகப்போகத்தான் தெரியும்” என்று தன் வறுமையைப்பற்றி எழுதியும் அதில் உழன்றும் பின்னாளில் காசநோயால் பீடிக்கப்பட்டும் உயிரிழந்தார்.

புதுமைப்பித்தனின் சாதனைக்களமாக கண்டறியப்படும் சிறுகதை பரப்பில் முக்கியமானவையாகத் தோன்றும் கதைகளிவை, காஞ்சனை, புதிய கூண்டு, மகா மசானம், ஒரு நாள் கழிந்தது, பொன்னகரம், சிற்பியின் நரகம், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சங்குத்தேவனின் தர்மம், கயிற்றரவு. மிக மிகச் சிறந்த சிறுகதைகள் எனப் பலரால் போற்றப்படுபவை சாபவிமோசனம், செல்லம்மாள் மற்றும் சிற்பியின் நரகம்.

தனது கனவை மீட்டெடுக்கும் வெளியாக அமைந்த சமகால வாழ்வின் மனக்குமைச்சல்கள், தரித்திர சூழல், உடற்பிணி, எழுத்து கொண்டுவந்து போகும் தாங்கொணாத வாதைகள் இவையெல்லாம் தாண்டி மகோன்னதமான அன்பை, துயரம் ததும்பும் காதலை, உறவுகளின் சிறகணைப்பை, கனவின் எதார்த்தத்தை நிறுவியவர். தற்போது இவரது படைப்புகள் நாட்டுமையாக்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு கிடைத்தப் பெரும்பேறு. சந்தியா பதிப்பகம், காலச்சுவடு பதிப்பகம், பாவை பப்ளிகேஷன்ஸ், என்.சி.பி.எச்., ஆகிய பதிப்பகத்தாரிடமிருந்து இவரது பல்வேறு தளம் சார்ந்த படைப்புகள் வெளியாகியுள்ளன. படிப்போம் பயன்பெறுவோம்.

– பாம்பாட்டிச் சித்தன்

பொருளடக்கம் செல்ல…

“நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுவதும், பழகிப் பழகிப் பொருளிழந்துவிட்டது என்று நான் உணர்வற்று நோக்கும் ஒரு சொல் / தொடர் / பழமொழியிலிருந்து ஒரு சமூக புரிதலை சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.ப வின் கருத்துப்புலப்பாட்டு முறை”

– ஆ.இரா.வேங்கடாசலபதி

பெருநகர வாழ்வின் எண்ணற்ற சுகங்களுக்கு அடியில் பொதிந்து கிடப்பது வேருக்கான ஏக்கம் என்பதை ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட கூற்று என ஒதுக்கி விட முடியாது. நெடுங்காலமாக நமது சமூகத்தின் முக்கிய அலகாக கிராமமே இருந்துவந்துள்ளது. கிராமம் மண்ணுடன் கொண்டுள்ள மிக நெருக்கமான உறவின் காரணமாக, அங்கிருந்தே நமது நாகரிகக்கூறுகளும் பழக்கவழக்கங்களும் கிளைத்து வந்திருக்கின்றன. ஆனால் நகர வாழ்வோ மண்ணிலிருந்து அந்நியப்பட்ட ஒன்று. பொருள்சேர்த்தல் எனும் பொதுவினைக்கான களமாகவே நகரம் செயல்படுகிறது. உலகமயமாக்கலின் நிழல் படிந்து, இனக்குழு அடையாளங்கள் அழிந்து, ஒரு பொது நாகரிகம் உருவாக்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மண்ணிற்கான ஏக்கம் மேலும் தீவிரம் கொள்கிறது. வேறு எப்போதையும் விட நாட்டார் அடையாளங்கள் (folklore) குறித்த ஆர்வம் உலகம் முழுவதும் இப்பொழுது அதிகரித்துள்ளதே இதற்கு சான்று.

இந்த பின்புலத்துடன் படிக்கப்படவேண்டிய நூல் தொ. பரமசிவன் எழுதியுள்ள “பண்பாட்டு அசைவுகள்”. முனைவர் தொ. பரமசிவன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை முதல்வராக பணியாற்றி வருகிறார். பேராசிரியர், சமூகவியலாளர், மானுடவியலாளர் என பல்வேறு ஆளுமைகளை கொண்டவர். தமிழ் சமூக மரபுகளை குறித்து இவர் அளவிற்கு அறிந்தவர்கள் சிலரே.

பண்பாட்டு அசைவுகள் என்ற இந்த புத்தகம், தொ.பரமசிவம் எழுதிய “அறியப்படாத தமிழகம்” மற்றும் “தெய்வங்களும் சமூக மரபுகளும்” ஆகிய இரு சிறிய புத்தகங்களின் தொகுப்பாகும்.
புத்தகத்தின் முதல் பகுதியான “அறியப்படாத தமிழகம்” இன்றைய தமிழ் வாழ்வின் அங்கங்களில் நமது நீண்ட பாரம்பரியத்தின் வேர்கள் இருப்பதை அலசுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் பொருளான உரல்/உலக்கை கூட பண்பாட்டின் நீட்சியாக இருப்பதை காட்டுகிறது ஒரு கட்டுரை. பிச்சையெடுத்தல், சோறு விற்றல் ஆகியவற்றின் வரலாறு முதல் 1939ல் நிகழ்ந்த மதுரை கோயில் ஆலயப்பிரவேசம் வரை இக்கட்டுரைகள் அலசும் விடயங்களின் பரப்பு ஆச்சரியமூட்டும் விரிவு கொண்டது. இத்தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்று “கருப்பு”. கருப்பு எனும் சொல் இன்றைய சூழலில் கீழானது என்ற எதிர்பொருளிலே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் கருப்பு மேன்மையை குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதனை தமிழ் இலக்கியத்தின் பின்புலத்தில் ஆராயும் கட்டுரை இது.

மதம் என்பது தனிமனிதர்களை உள்ளடக்கிய ஓர் சமூக அமைப்பு. அதனாலேயே மதத்தில் தனிமனித கூறுகளை விட சமூக கூறுகளே அதிகம் உள்ளன. இந்நூலின் இரண்டாம் பகுதி “தெய்வங்களும் சமூக மரபுகளும்”.இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் மதம் என்னும் சமூக அமைப்பு தமிழ் சமூகத்தின் மீது செலுத்திய/செலுத்தும் ஆளுமைகளை குறித்தே ஆகும். சிறு தெய்வ வழிபாடுகளுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இருக்கும் மிக நெருங்கிய தொடர்பு, மாற்று மரபுகளை தமிழ் வைணவம் எதிர்கொண்ட விதம், தமிழ் சமூகத்தில் சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் உள்ள வரலாற்று முக்கியத்துவம், தமிழ் சமூகத்தின் ஓர் பகுதியாக வெகு நீண்டகாலமாகவே இருந்துள்ள இசுலாமியர் என பல விடயங்களை அலசுகின்றன இக்கட்டுரைகள். பெருமதங்களில் அல்ல, சிறுதெய்வ வழிபாடுகளிலேயே தமிழ் சமூகத்தின் வேர்கள் உள்ளன எனும் கருத்தை நிறுவ முயல்கிறது இப்புத்தகம்.

இப்புத்தகத்தில் பரமசிவன் பயன்படுத்தியுள்ள சிறுகட்டுரை வடிவம், புதிதாய் சமூகவியல் குறித்து அறிய விரும்பும் வாசகர்களுக்கு பயன் தரக்கூடியது.

புத்தக விவரம்:

பண்பாட்டு அசைவுகள்
தொ. பரமசிவன்
காலச்சுவடு வெளியீடு

– வெ. சித்தார்த்

பொருளடக்கம் செல்ல…


சக்கரங்கள்
அழுத்தி அழுத்தியே
பழுதாகியும் பழுப்பேறியும் போன
பயணச்சாலையாய்
மல்லாந்து கிடக்கிறது வாழ்க்கை
வேண்டிய மட்டும் விரைவாய்
தடிம தார்ப்பூச்சு
தேவையென்றிருக்க
கடந்து செல்லும்
கோடை காலத்து மேகம்
கைத்தவறிச் சிந்திய
ஊசித் தூரலில் நனைந்து
ஈசல் பூச்சியையொத்த
ஒற்றை நாள்
ஆயுள் நிறைவுகளில் சந்தோசித்து
புதிதாகிப் போன பூரிப்போடு
வாகனங்கள் தாக்கிய வதையை
தற்காலிகமாய் மறந்து
வளைந்து நெளிந்து நீள்கிறது
வாழ்க்கை…..

*******

நீரூற்றி
நிதம் நீவிக்கொடுத்து
தனிமை தவிர்க்க
அதனோடு பேசி
பச்சையம் காத்துக்கொள்ள
சூரிய ஒளிப் பிடித்து ஊட்டி
காற்றோடு சண்டையிட
தடியொன்றும் ஊன்றிக்கொடுத்து
வண்டோ பூச்சியோ
வராவண்ணம் காத்து
மூப்படைந்த இலைகளகற்றி
இத்தனை
கரிசனங்களோடு
கண்காணித்திருக்க
ஒரு
இரவோடு இரவாக
எனக்குத் தெரியாது பூவெய்தி நிற்கும்
தொட்டிச் செடி

– வளநாடன்

பொருளடக்கம் செல்ல…

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”

திரைகடலோடி திரவியம் தேடும் குவைத் வாழ் தமிழர்கள் அனைவரும் தமிழ் நூல்கள் பல கற்று பயணுற வேண்டும் என்ற நோக்கில், நவம்பர் மாதம் நடைபெற்ற “பாலைக்குயில்கள்” மாதாந்திர கூட்டத்தில் “பாலைக்குயில்கள் நூலகம்” தொடங்கப்பட்டது.

பாலைக்குயில்கள் சங்க உறுப்பினர்களின் சொந்த சேகரிப்பில் உள்ள நூல்களை இத்திட்டத்திற்க்கு அளித்துள்ளனர். இவற்றில் கவிதை, இலக்கியம், புதினம், சிறுகதைத் தொகுப்பு மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் நூல்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

பாலைக்குயில்கள் உறுப்பினர்கள் மட்டுமே பங்கெடுத்துள்ள இத்திட்டத்தை ஏனைய பிற தமிழர்களும் பயன்பெறும் வகையில் விரிவு படுத்தும் திட்டமும், குழந்தைகள் பயனுற, குழந்தைகளுக்கான நூல்களை சேகரிக்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்க்கென மின்னஞ்சல் வசதியுடன் கூடிய தனியே ஒரு கூகுள் குழுமம் (www.groups.google.com/group/paalainoolagam) ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இக்குழுமத்தில் நூலகம் குறித்த தகவல்களும், நூல் அட்டவணை போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

இக்குழுமத்தினூடே, நூலக உறுப்பினர்களுக்கு நூல்கள் குறித்த தகவல்களும், நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாரை அறிமுகப் படுத்தும் திட்டமும் உள்ளது.

இத்திட்டம் குறித்த விபரங்கள் அறிய கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல் முகவரி : “paalainooagam@googlegroups.com”

புத்தக வாசிப்பே இளைய தலைமுறைக்காண கருவூலம்.

– தமிழ்நாடன்

பொருளடக்கம் செல்ல…

அரிதாரம் பூசாத கதாநாயகி/நாயகர் கள்

குவைத் நாட்டில் வாழும் தமிழ் இனத்திற்கு வணக்கம்.

தமிழகத்தின் சமீபத்திய பல்வேறு நிகழ்வுகளில் கவனிக்கத்தக்க, மனஇயல் ரீதியாக மகிழ்ச்சியையும், அதிர்ச்சியையும் அளிக்கக்கூடிய சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

சென்னையில் நிகழ்ந்த புத்தகச்சந்தையில் ஏழு லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியிருப்பது, இனம் சார்ந்து சிறு குழுக்களமைத்து தங்களின் மேதாவித்தனத்தை தாங்களே சுயமோகம் கொள்ளும் தமிழகத்தின் அறிவுஜீவிகள் மட்டுமல்லாது (நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் தொலைக்காட்சியின் பல்வேறு தொடர்களின் மாயவலையில் சிக்கியிருப்பதால், அவர்களைத் தவிர்த்து) மற்ற தரப்பினர் புத்தகங்களை வாசிக்கும் மனோநிலைக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருப்பது பேருவகை தரும் விசயம்.

நைச்சியமாக நண்பர்களால் கொல்லப்பட்ட பள்ளி மாணவன், ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவன் எனும், மாணவ சமுதாயம் சார்ந்த வன்செயல்கள் தினசரி நகரவாழ்வின் பரபரப்பில் யந்திரகதியில் அலைக்கழியும் மாணவனின் அவலத்தையும், வளர்ந்து வரும் விஞ்ஞானம் தேவதையின் சிறகுகளோடும், சாத்தானின் வாலோடும் அவனை ஆலிங்கனம் செய்வதையும், அரூபநஞ்சாய் மற்றவர்களின் செயல்கள் தூவிவிடும் வெறுப்பும், மனிததுவேசமும் அவனை வந்தடைவதையும், அடுக்குமாடி கட்டிடங்களுக்குள் சுருங்கிவிட்ட அவனது வாழ்வின்வெளி உருவாக்கும் பெருநகர் பிராயத்து மனநெருக்கடியும், திரைப்பட கதாநாயகி/நாயகர் களையும், அரசியல்வாதிகளையும் லட்சிய உருவங்களாகவும் முன்னுதாரணங்களாகவும் கொண்டு அலைகிற தலைக்கு எண்ணெய் வைக்காத இந்த தலைமுறையின் பன்முகங்களில் ஒளிபாய்ச்சத்தவறவில்லை.

அரிதாரம் பூசாத கதாநாயகி/நாயகர் களாக பெற்றெடுத்து, பேணிவளர்க்கும் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளின் வழிகாட்டிகளாகவும், மனதின் ஆதர்சங்களாகவும் ஏன் இருக்க இயலாது? மனக்கிளையில் எரிகொம்பைப்போல பற்றி எரியும் கேள்வி இது.

– பாம்பாட்டிச் சித்தன்

பொருளடக்கம் செல்ல…